நாம் சொத்துகளை வாங்கும் போது சில சாதாரண பிரச்சினைகளில்
மாட்டிக்கொண்டு தவிக்க நேரிடும் சூழலும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே நாம் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதில் சற்றுக்
கவனத்தோடு முன்கூட்டியே
அறிந்து செயல்படுவது நல்லது. கீழ்க்காணும் பிரச்சினைகளைக் கவனத்தில் வைத்துக்கொள்ள
வேண்டும்.
* விற்பவர் சட்டப்படி சொத்தில் உரிமையற்றவராக இருக்கலாம்.
* விற்பவர் அந்தச் சொத்தின் முழு உரிமையாளராக இல்லாமல் இருக்கலாம்.
* பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்திற்கும் காண்பிக்கப்படும்
இடத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம்.
* அந்தச் சொத்து ஏற்கெனவே வேறு ஒருவருக்கு விற்கப்பட்டிருக்கலாம்.
* அல்லது சொத்தின் ஒரு பகுதி ஏற்கெனவே வேறு ஒருவருக்கு விற்கப்பட்டிருக்கலாம்.
* விற்பவர் தமக்குச் சம்பந்தமில்லாத இணை இடத்தையும் சேர்த்து விற்க முற்படலாம்.
* மைனர் சொத்தாகவே சம்பந்தப்பட்ட சொத்தை விற்க முற்படலாம்.
* சொத்துப் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கலாம்.
* நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட இடமாக இருக்கலாம்.
* சரியான சட்டப்படியான அணுகுபாதை அல்லது ரோடு வசதி இல்லாமல் இருக்கலாம்.
* மூலப் பத்திரங்களின் தொடர்பு பற்றிய தெளிவில்லாமலோ, விற்க முடியாத வகையிலான
சொத்தாகவோ இருந்தால் அதனைப் பயன்படுத்தி வங்கிக் கடன் பெற முடியாத சூழ்நிலை
ஏற்படலாம்.
* பழைய கட்டடங்களைப் பொறுத்தவரை முறையான அனுமதி பெறாமல் இருப்பின், கூடுதலான அல்லது
அதிகப்படியான கட்டடங்கள் கட்ட அனுமதி கிடைப்பதில் பிரச்சினைகள் எழலாம்.
* சொத்தினை நாம் வாங்கியபின் அதைப் பிறருக்கு விற்கமுடியாமல் பிரச்சினைகள் எழலாம்.
அல்லது ஏற்படுத்தப்படலாம்.
* நேரில் காணும்போது பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்தின் அளவு மற்றும் பரப்பு
போன்றவற்றில் வித்தியாசம் வரலாம்.
* பரப்பைக் கணக்கிட்டதில் தவறு இருக்கலாம்.
* சொல்லப்படும் விலைக்குரிய தகுதியுடைய சொத்தாக இல்லாமல் இருக்கலாம்.
* விற்பவர் பொது நடைபாதைகளையும் சேர்த்து விற்க முற்பட்டிருக்கலாம்.
* பத்திரத்தில் மதிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளில் திசைகளை மாற்றிக்
குறிப்பிடப்பட்டிருக்கலாம்.
* காம்பௌண்ட் சுவர்கள், சுற்றுப்புறச் சுவர்கள் அல்லது நான்கு சுவர்களின் உண்மையான
உரிமை குறிப்பிடப்படாமல் இருக்கலாம்.
* நடைபாதைகள் இருப்பின் அவற்றின் உரிமைநிலை தரைத்தளத்தில் எவ்வாறு எனவும் முதல்
தளத்தின் நிலை எவ்வாறு எனவும் உறுதியிட்டுக் கூறப்படாமல் இருக்கலாம்.
* கிரயம் முடிந்தபின் கட்டடத்தில் உள்ள மின் சாதனங்கள், விளக்குகள், மோட்டார்
சாதனங்கள் போன்றவை அப்புறப்படுத்தப்பட்டிருக்கலாம். பத்திரத்தில் அவற்றைப் பற்றிய
உரிமையைக் குறிப்பிடச் செய்தல் நல்லது.