மதுரை: சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமனைக் குறைப்பதற்கான உணவுக் கண்காட்சித் திருவிழா மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் டாக்டர் ரவிக்குமார் பேசியது:
வளரும் நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உணவு முறைதான் இதற்குக் காரணம்.
உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் 58 சதவிகிதம் நோய் வராமல் தடுக்கலாம். மருந்துகள் மூலம் 36 சதவிகிதம் மட்டுமே நோயைக் கட்டுக்குள் வைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடற்பயிற்சியும், உணவுக் கட்டுப்பாடும் இருந்தால் நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வெளிநாடுகளில் இதுபோன்ற உணவுக் கண்காட்சி மூலமாக உணவு பற்றிய விழிப்புணர்வு உள்ளது. நம் நாட்டிலும் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
மதுரை வேளாண்மைக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் அழகிய நாகலிங்கம் பேசியது:
பொதுவாக அரிசி, கோதுமை போன்ற உணவுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கம்பு, ராகி, கேழ்வரகு போன்ற சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒருவருக்கு ஒருநாளைக்கு 25 கிராம் நார்ச்சத்து உள்ள உணவுப் பொருள் தேவை. சிறு தானியங்களில்தான் நார்ச்சத்து உள்ளது. எனவே இவற்றை நாம் உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்றார்.