சத்யராஜ், சுந்தர் சி. இணைந்து நடித்து, ஷக்தி சிதம்பரம் டைரக்டு செய்துள்ள புதிய படம், "குரு சிஷ்யன்".' இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது. விழாவில், சத்யராஜ் பேசும்போது, "என்னை மாதிரி நடிகர்களுக்கு, ஒரு துணை தேவைப்படுகிறது. தனி கதாநாயகனாக நடித்தால், என் படத்தை நானே பார்க்க மாட்டேன். அதனால் தான் இந்த படத்தில் சுந்தர்சி.யுடன் இணைந்து நடித்தேன்.
இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். எப்போதுமே நல்ல கதை இருந்தால், அந்த படம் ஜெயிக்கும். குறிப்பாக, பெண்கள் பிரச்சினையை மையமாக வைத்து படம் எடுத்தால் ஜெயிக்கலாம். இதற்கு உதாரணமாக சில படங்களை கூறலாம். `பராசக்தி' படத்தில் சிவாஜி சார்தான் கதாநாயகன் என்றாலும், ரஞ்சனியின் பிரச்சினையை மையமாக வைத்து அந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
தமிழ் பட வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் ஓடிய `சந்திரமுகி' படத்தை எடுத்துக்கொண்டால், ஜோதிகா கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து கதை அமைந்திருந்தது.அதேபோல் "குரு சிஷ்யன்" படமும், பெண்கள் பிரச்சினையை கருவாக கொண்ட கதைதான். அதனால் இந்த படம் 25 வாரங்கள் கூட ஓடும்"என்று தெரிவித்தார்.