திருப்பூர்: சென்னை தமிழ்சங்கமும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து திருப்பூர் மாவட்டத்தில் நிறைந்துள்ள கலை, பண்பாடுகளை மேம்படுத்தும் வகையில் நம்ம திருப்பூர் கூடல் 2010 கலைவிழா வை நடத்துகிறது.
இவ்விழா வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை (பிப்.5) சிறந்த காங்கேயம் காளைகளுக்கான பரிசளிப்பு விழா காங்கயம் அரசு மே.பள்ளியில் மாலை 3 மணிக்கு நடக்கிறது. ஊரகத்தொழில் வளர்ச்சித் துறை அமைச்சர் பொங்கலூர் நா.பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்புரையாற்றுகிறார்.
தொடர்ந்து நம்ம திருப்பூர் கலையரங்கம் திறப்பு விழா திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. கலையரங்கை கனிமொழி எம்பி திறந்து வைத்து விழாவுக்கு தலைமையேற்கிறார். முதல் நாள் நிகழ்ச்சியாக வசந்த வீதி என்ற தலைப்பில் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்கும் இசை நாட்டிய, நாடக நிகழ்ச்சியும், ஜான்பிரிட்டோ குழுவினர் மற்றும் பழனி இசைக் கல்லூரி மாணவர்களின் இசை உற்சவமும் நடத்தப்பட உள்ளன. இதுதவிர, திருப்பூர் மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களின் சிறப்பு நடன நிகழ்ச்சியும் அரங்கேற்றப்பட உள்ளன.
தொடர்ந்து, 2ம் நாளான சனிக்கிழமை சென்னை அவிக்னா நடனக் குழுவினர் மற்றும் திருப்பூர் பள்ளி, கல்லூரி குழுக்களின் நிகழ்வுகள் மற்றும் கொங்கு நில நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை இரவும் நடக்க உள்ளது.
3ம் நாளான ஞாயிற்றுக்கிழமை சங்கே முழங்கு என்ற பெயரில் பிரபல டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி மற்றும் 100க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களின் இசை நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இந் நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வசந்த், நடிகை பிரியா மணி உள்ளிட்ட முக்கிய திரை நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இவ்விழா நடக்கும் 3 நாட்களும் தமிழகத்தின் பாரம்பரிய உணவுத்திருவிழா விழா அரங்கில் நடக்க உள்ளது.